
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?
கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது.
அத்துடன் லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது.
வரண்ட வானிலை காரணமாக மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் 2.5 மில்லியன் கனமீட்டர் நீரில், 1.25 மில்லியன் கனமீட்டர் மேல் மாகாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவினால் இங்கு 15,000 கனமீட்டர் நீர் உற்பத்தி குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் என்பதால் நீரின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும், எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
