
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல – கெய்ர் ஸ்டார்மர்
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல என்றும், அதில் தனது நாடு ஒருபோதும் ஈடுபடாது என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அண்மைய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் பிரித்தானியாவின் தேசிய நலன்களுக்கு உகந்தது அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், வாழ்க்கைச் செலவைக் குறைக்க ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதே ஒரே வழி எனவும் தெரிவித்துள்ளார்.
போர் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, ராஜதந்திர ரீதியில் தீர்வுகளைக் காண பிரித்தானியா முன்னின்று உழைக்கும்.
இதன் ஒரு கட்டமாக, கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 35 நாடுகளை ஒன்றிணைத்து, வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் தலைமையில் இந்த வார இறுதியில் முக்கியக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஈரானில் போர்ச் சூழல் நிலவினாலும், பட்ஜெட் நடவடிக்கைகள் காரணமாக பிரித்தானியாவில் ஜூலை மாதம் வரை எரிபொருள் விலையில் மாற்றம் இருக்காது என்றும் பிரதமர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
