
பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை
பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்கள், பங்களாதேஷ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் சிட்டகாங் மத்திய சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக இலங்கையிலுள்ள இவர்களது குடும்பங்கள் பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைக்கு அமைய, கடற்றொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் பலனாக நேற்று (31) இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று ( 01) டாக்கா சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நாளை (02) கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைய உள்ளனர்.
