
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
நாங்கள் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எண்ணெய் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் எண்ணெய் இறக்குவதற்கு இரண்டு முக்கிய இடங்கள் மட்டுமே உள்ளன.
ரஷ்ய நிறுவனம் வழங்கும் எண்ணெய் கப்பல் ஒன்று அத்தகைய இடத்திற்கு வந்து சேர்வதற்கான திகதிகள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு டீசல் கப்பல் நாளை இலங்கைக்கு வரவிருக்கிறது. அது 32,000 மெட்ரிக் தொன் டீசலையும் 5,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளையும் ஏற்றி வரும்.
ஆறு மற்றும் ஏழாம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் வரவிருக்கின்றன. இதன் மூலம், ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என நாம் எதிர்பார்த்திருந்த அனைத்துக் கப்பல்களும் வந்து சேரும்.
இதன் மூலம் மே மாதம் இறுதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. இருப்பினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அதை கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
