இஸ்ரேலின் மரண தண்டனை சட்டத்திற்கு ஸ்பெய்ன் கடும் எதிர்ப்பு

இஸ்ரேலின் மரண தண்டனை சட்டத்திற்கு ஸ்பெய்ன் கடும் எதிர்ப்பு

இஸ்ரேலியர்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இஸ்ரேல் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) கடுமையாகச் சாடியுள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை வழங்க அந்நாட்டு இராணுவ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த நடவடிக்கை குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சான்செஸ், இது “நிறவெறி (Apartheid) கொள்கையை நோக்கிய மற்றொரு படி” என்று வர்ணித்துள்ளார்.

இந்தச் சட்டம் ஒருதலைப்பட்சமானது மற்றும் பாகுபாடு காட்டக்கூடியது என்று குறிப்பிட்ட அவர், ஒரே மாதிரியான குற்றத்தைச் செய்யும் இஸ்ரேலியர்களுக்கு இந்த மரண தண்டனை விதி பொருந்தாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“ஒரே குற்றம், ஆனால் தண்டனை மட்டும் வேறுபட்டது என்பது நீதியல்ல. இது ஒரு சமச்சீரற்ற நடவடிக்கை” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் மூலம் இஸ்ரேல் சர்வதேச நீதி நெறிகளை மீறுவதாகவும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மௌனமாக இருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாட்டை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் இராணுவ நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்படும் நிலையில், இஸ்ரேலிய குடிமக்கள் சிவில் நீதிமன்றங்களால் விசாரிக்கப்படுவதால் அவர்கள் இச்சட்டத்திலிருந்து தப்பிவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் பிரதமரின் இந்த பகிரங்கக் கண்டனம், சர்வதேச அளவில் இஸ்ரேல் மீதான அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )