செய்திகள் வந்த பாதை: அன்றைய கால ஓலை முதல் இன்றைய செல்போன் வரை!

செய்திகள் வந்த பாதை: அன்றைய கால ஓலை முதல் இன்றைய செல்போன் வரை!

இன்று நம் கையில் இருக்கும் ஒரு சிறிய செல்போன் மூலமாக உலகில் எங்கே என்ன நடந்தாலும் அடுத்த வினாடியே தெரிந்து கொள்கிறோம். ஆனால், செல்போன், தொலைக்காட்சி, வானொலி என எதுவுமே இல்லாத பழைய காலத்தில் மக்கள் எப்படி செய்திகளைத் தெரிந்துகொண்டார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

வாய்மொழிச் செய்திகள் (பயணிகள் மூலம்)

ஆரம்ப காலத்தில் செய்திகள் பரவுவதற்கு ஒரே வழி ‘வாய்மொழி’ தான். ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வியாபாரிகள், பயணிகள் மற்றும் நாடோடிகள் தான் அந்தக்காலத்து ‘செய்தி நிறுவனங்கள்’. அவர்கள் ஒரு ஊரில் கேட்டதை அடுத்த ஊரில் கதையாகச் சொல்வார்கள். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது; ஒருவன் சொல்வதை இன்னொருவன் சொல்லும்போது செய்தி கொஞ்சம் கொஞ்சமாகத் திரிந்து, சில நேரங்களில் பொய்யான கதைகளும் பரவின.

அரசாங்க அறிவிப்புப் பலகைகள் (ரோமானியர்கள்)

பண்டைய ரோம் நாட்டில், அன்றாட நிகழ்வுகளை ஒரு பலகையில் எழுதி பொது மக்கள் கூடும் இடங்களில் வைத்தார்கள். இதற்கு ‘அக்டா டியுர்னா’ (Acta Diurna) என்று பெயர். இதன் மூலம்தான் அரசாங்கச் சட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை மக்கள் படித்துத் தெரிந்துகொண்டனர்.

உளவுத் தகவல்கள் (மன்னர் காலம்)

மன்னர்கள் தங்கள் நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் ‘ஒற்றர்களை’ அல்லது அவதானிப்பாளர்களை அனுப்புவார்கள். அவர்கள் இரகசியமாகக் கடிதங்கள் மூலம் நாட்டில் நடக்கும் விசேட செய்திகளையும், கிசுகிசுக்களையும் மன்னருக்குத் தெரியப்படுத்துவார்கள்.

சீன அரசின் செய்தி அறிக்கைகள்

பண்டைய சீனாவில், அரசாங்கம் தனது அதிகாரிகளுக்குத் நாட்டின் நிலைமையைத் தெரிவிக்க செய்தி அறிக்கைகளை அனுப்பியது. புதிய சட்டங்கள் மற்றும் தலைநகரில் நடக்கும் விசேட நிகழ்வுகள் பற்றி இதில் எழுதப்பட்டிருக்கும்.

அச்சு இயந்திரத்தின் புரட்சி (1450-க்குப் பின்)

1450-ஆம் ஆண்டு அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, செய்திகள் காகிதத்தில் அச்சிடப்பட்டன. குற்றச் செய்திகள், போர் மற்றும் அரசியல் பற்றிய சுவாரஸ்யமான கதைகளை அச்சிட்டு விற்றார்கள். சில நேரங்களில் விற்க வேண்டும் என்பதற்காக கற்பனையான பேய்க் கதைகளையும் கூட அச்சிட்டார்கள்.

செய்தித்தாள்களின் வருகை (1600-களில்)

1600-களில் தான் முறையான செய்தித்தாள்கள் (Newspapers) வெளிவரத் தொடங்கின. 1700-களில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் மக்களிடையே புழக்கத்திற்கு வந்தன. மக்கள் இதில் செய்திகளை வாசித்தது மட்டுமன்றி, தங்கள் கருத்துக்களையும் விவாதிக்கத் தொடங்கினார்கள்.

தந்தி (Telegraph) – மின்னல் வேகச் செய்திகள்

1830-களில் தந்தி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது செய்திகள் பரவும் வேகத்தையே மாற்றியது. வாரக்கணக்கில் தபாலில் வரவேண்டிய செய்திகள், ஒரு சில நிமிடங்களிலேயே ஒரு நகரிலிருந்து இன்னொரு நகருக்குச் சென்றன. உதாரணமாக, கலிபோர்னியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அடுத்த நாளே நியூயோர்க்கில் இருப்பவர்கள் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

இன்றைய டிஜிட்டல் காலம் (உடனடிச் செய்திகள்)

இன்று வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் (Internet) மூலம் செய்திகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. இப்போது எவரும் சொந்தமாக ஒரு ‘செய்தியைப்’ பதிவிட முடியும். ஆனால், செய்திகள் இவ்வளவு வேகமாக வரும் இந்த காலத்தில், எது உண்மையான செய்தி, எது பொய் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் நமக்கு இருக்கும் சவாலாக இருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )