
மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும் ‘தொற்றுப் பழக்கம்’!
யாராவது ஒருவரைப் பார்த்து நாம் கொட்டாவி விட்டால், நமக்கும் கொட்டாவி வரும். இது ஒருவகை ‘தொற்றுப் பழக்கம்’ (Contagious behavior). இதே போன்ற ஒரு விசித்திரமான பழக்கம் சிம்பன்சி குரங்குகளிடமும் இருப்பதை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எனா ஒனிஷி என்ற மாணவி, 600 மணித்தியாலங்களுக்கு மேலாக குரங்குகளை அவதானித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஒரு கூட்டத்தில் இருக்கும் ஒரு குரங்கு சிறுநீர் கழித்தால், அதைப் பார்த்து மற்ற குரங்குகளும் சிறுநீர் கழிக்கத் தொடங்குகின்றனவாம்.
குறிப்பாக, அந்தப் பிரிவின் ‘தலைவர்’ அல்லது பெரிய குரங்கு சிறுநீர் கழிக்கும் போது, அதைப் பார்க்கும் மற்றக் குரங்குகளும் உடனே சிறுநீர் கழிக்கின்றன. இது அந்தக் குரங்குக்கூட்டத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த அல்லது ஏதாவது ஆபத்து வரும்போது ஓரிடத்தில் சிறுநீர் வாசனையை வைத்து எச்சரிக்கையாக இருக்கப் பயன்படலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
