
ஈரான் போரில் அமெரிக்கா சவால்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது – அலெக்ஸ் யங்கர்
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு இடையில் தீவிரமடைந்துள்ள போரில், ஈரான் மிகவும் சாதுர்யமாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவின் இரகசிய புலனாய்வு சேவை (Secret Intelligence Service) அமைப்பின் முன்னாள் தலைவர் அலெக்ஸ் யங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்தப் போரின் சவால்களைச் சரியாகக் கணிக்கத் தவறிவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக போரின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியை அமெரிக்கா இழந்து, அது தற்போது ஈரானின் வசமாகியுள்ளதாக அலெக்ஸ் யங்கர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஜூன் மாதத்திலிருந்தே ஈரான் தனது இராணுவ நிலைகளை சிதறடித்தும் (Dispersing), ஆயுதங்களைப் பயன்படுத்தும் அதிகாரத்தைப் பரவலாக்கியும் வைத்திருந்தது. இது அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈரான் நிலைத்து நிற்க உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா இந்தப் போரை ஒரு தெரிவாக முன்னெடுத்தாலும், ஈரான் இதனைத் தனது நாகரிகத்தையும் இருப்பையும் தற்காத்துக் கொள்வதற்கான போராகக் கருதுகிறது. இது ஈரானியர்களுக்கு அதிக மன உறுதியை வழங்கியுள்ளது என்றும் அலெக்ஸ் யங்கர் வலியுறுத்தியுள்ளார்.
