திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடிவு

திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடிவு

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலதிகமாக, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமையை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள சேவைகளை விரைவுபடுத்துவதற்காக டிஜிட்டல் சேவை அமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய வலுசக்தி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எம்.எச். அபேரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி.எம். உதயங்க ஹேமபால, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி.ஆர்.டபிள்யூ.எஸ். தனபால, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.எஸ். ராஜகருணா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )