
போர் நிறுத்தம் – டிரம்பின் அறிவிப்பை கேலி செய்த ஈரான் அதிகாரி
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கேலி செய்துள்ளார்.
இதன்படி, அமெரிக்கர்கள் தங்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய இராணுவத்தின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரான லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பப்பட்ட காணொளி ஒன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நீங்கள் முன்பு பேசிய மூலோபாய சக்தி, ஒரு மூலோபாயத் தோல்வியாக மாறிவிட்டது,” “தன்னை ஒரு உலக வல்லரசு என்று கூறிக்கொள்பவரால், ஏற்கெனவே இந்தக் குழப்பத்திலிருந்து வெளியேறியிருப்பார்.
உங்கள் தோல்வியை ஒரு உடன்பாடாகக் காட்டாதீர்கள். உங்கள் வெற்று வாக்குறுதிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை அனுப்பிய சிறிது நேரத்திலேயே ஸோல்ஃபகாரியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“முதல் நாளிலிருந்தே எங்கள் முதல் மற்றும் கடைசி வார்த்தை ஒன்றாகவே இருந்து வருகிறது, இந்த வார்த்தை ஒருபோதும் மாறாது.
எங்களைப் போன்றவர்கள் உங்களைப் போன்ற ஒருவருடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்,” எனவும் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி வலியுறுத்தியுள்ளார்.
“நமது ஆயுதப் படைகளின் வலிமையான கரத்தால் இப்பகுதியில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எங்கள் விருப்பம் நிறைவேறும் வரை, எதுவும் வழமைக்கு திரும்பாது.
ஈரானிய தேசத்திற்கு எதிராகச் செயல்படும் எண்ணம் உங்கள் ஊழல் நிறைந்த மனங்களிலிருந்து முற்றிலுமாகத் துடைக்கப்படும்போதுதான் சாத்தியப்பாடுகள் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
