
சேவையில் இருந்து விலகிய பேருந்து சங்கங்கள்
எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணத் திருத்தம் கோரி சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று காலை முதல் சேவையிலிருந்து விலகியுள்ளன.
இதனால் இன்று காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதோடு, அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப பேருந்து கட்டணங்களை உயர்த்துமாறு சங்கங்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டண சூத்திரத்தின்படி, தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், புதிய கட்டணங்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும், உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை எனவும், பழைய கட்டணத்தில் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட முடியாது எனவும் பேருந்து சங்கப் பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, முச்சக்கர வண்டிகளின் முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
Uber மற்றும் PickMe ஆகிய நிறுவனங்களும் தமது சேவைகளைப் பராமரிக்க விசேட எரிபொருள் ஒதுக்கீடு அவசியம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
அமைச்சரவையின் இன்றைய தீர்மானத்தைத் தொடர்ந்தே, நாட்டின் போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
