
சிதைக்கப்படுகிறது ஈரான்: போர் விரைவில் முடிவுக்கு வரும்
“ஈரானால் இனி யுரேனியத்தை செறிவூட்டவோ அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவோ முடியாது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய நெதன்யாகு, “முதலில், நான் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான பாகங்களையும், அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிக்கும் அவர்களின் தொழிற்சாலைகளையும்தான் நாம் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம்.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுதக் கிடங்கு மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு அழிக்கப்படும்.
இஸ்ரேல் தான் அமெரிக்காவை இந்த போருக்குள் இழுத்துவிட்டது என்பது உண்மையில்லை. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறார்களா?.
அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே எப்போதும் அவர் தனது முடிவுகளை எடுக்கிறார்.
ட்ரம்ப்புடன் நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான நெருங்கிய ஒருங்கிணைப்பிலும், எங்கள் ராணுவங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், நாங்கள் மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம்.
இந்தப் போரில் அமெரிக்க – இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மத்திய கிழக்கையும் பாதுகாக்கிறோம். மேலும், முழு உலகத்தையும் பாதுகாக்கிறோம் என்று நான் துணிந்து கூறுவேன். ஈரான் விஷயத்தில் நானும் ட்ரம்ப்பும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் உலகம் ட்ரம்ப்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். முதல் உண்மை, தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகத்துக்கு எதிராக இஸ்ரேல் தனியாகவே செயல்பட்டது. இரண்டாவது உண்மை, எதிர்காலத் தாக்குதல்களைத் தள்ளிப்போடுமாறு ட்ரம்ப் எங்களிடம் கேட்டுக்கொண்டார், நாங்கள் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரில் நாம் வெற்றி பெறுகிறோம், ஈரான் சிதைக்கப்படுகிறது. தற்போது ஈரானை யார் நடத்துகிறார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஈரான் உயர் அதிகாரிகளிடையே மிகுந்த பதற்றம் நிலவுகிறது. போர் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக முடிவுக்கு வரும். ” என்று அவர் கூறினார்.
