
எரிபொருள் கியூஆர் குறியீடு ஊடாக இணைய மோசடி – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தேசிய எரிபொருள் அனுமதி முறைமைக்கான அணுகலை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் செய்திப் பரிமாற்ற செயலிகள் ஊடாக பரவும் மோசடி இணையதளம் குறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயனர்களைத் தவறாக வழிநடத்தி, தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டு இது போன்ற இணையதளங்கள் செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், செய்திப் பரிமாற்ற செயலிகள் அல்லது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ள அறியப்படாத இணையதள இணைப்புகளைப் பார்க்கவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம் என இலங்கை கணினி அவசரகால பதிலளிப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இணையவழி மோசடிக்கு பலியாகாமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இணையத்தில் பாதுகாப்பான செயற்பாடுகளை கடைப்பிடிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
