ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான மதிப்பீடுகளால் சிக்கலில் அமெரிக்கா?

ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான மதிப்பீடுகளால் சிக்கலில் அமெரிக்கா?

ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடும் என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மிகக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளதாக (Underestimated) தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழுவினர், ஈரான் எடுக்கக்கூடிய இந்த அதிரடி நடவடிக்கையால் ஏற்படக்கூடிய மோசமான பின்விளைவுகளைத் தமது திட்டமிடலின் போது முழுமையாகக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டதாக இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த பல தரப்புகள் தெரிவித்துள்ளன.

நிபுணர்கள் மற்றும் திணைக்கள ஆய்வுகள் ஓரங்கட்டப்பட்டனவா?

வழக்கமான நிர்வாகங்களில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது எரிசக்தி மற்றும் திறைசேரி திணைக்களங்களின் விரிவான ஆய்வுகள் முதன்மைப்படுத்தப்படும். ஆனால், தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் தனது மிக நெருங்கிய ஆலோசகர்களின் கருத்திற்கே முன்னுரிமை வழங்கியதால், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் ஏற்படக்கூடிய உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் குறித்த ஆழமான விவாதங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் திட்டமிடலில் பங்கேற்ற போதிலும், ட்ரம்ப் தனது சிறு வட்டத்திற்குள் இருக்கும் ஆலோசகர்களை மட்டுமே நம்பியிருந்தமை, இவ்வாறான ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் தாங்கிகளுக்கான பாதுகாப்பு ஏன் வழங்கப்படவில்லை?

கடல் வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் தாங்கிகளுக்கு (Oil Tankers) அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கப்பல் நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இருப்பினும், ஈரான் பயன்படுத்தும் நவீன ஆளில்லா விமானங்கள் (Drones), ஏவுகணைகள் மற்றும் கடலில் வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் காரணமாக, இப்போதைக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்குவது மிகவும் ஆபத்தானது என பென்டகன் தெரிவித்துள்ளது.

“எமது கடற்படைக் கப்பல்கள் தற்போது ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளை அழிக்கும் பணிகளிலேயே மும்முரமாக ஈடுபட்டுள்ளன. எனவே, வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தற்போது சாத்தியமில்லை. அநேகமாக இந்த மாத இறுதியில் இது சாத்தியப்படலாம்” என எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப்பின் ‘லாப’ நோக்கம்

எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றங்களை ட்ரம்ப் தொடர்ந்து தற்காலிகமான ஒன்றாகவே சித்தரிக்கின்றார். “அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர். எனவே எண்ணெய் விலை உயரும்போது நாம் அதிக பணம் சம்பாதிக்கிறோம்” என அவர் தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே தனக்கு முக்கியமானது எனவும், எதிர்கால நீண்ட கால பலன்களுக்காக தற்போது ஏற்படும் குறுகிய கால வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா எடுக்கும் மாற்று வழிகள்

எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பின்வரும் அதிரடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகின்றது:

ஜோன்ஸ் சட்டத்தில் தளர்வு (Jones Act Waiver): அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தில் நிலவும் பழைய சட்டக் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக நீக்குதல்.

ரஷ்ய எண்ணெய் மீதான தளர்வு: கடலில் தேங்கியுள்ள ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்யத் தற்காலிக அனுமதி வழங்கியமை.

சுற்றுச்சூழல் விதிகளில் தளர்வு: பெட்ரோல் உற்பத்தியின் போது விதிக்கப்படும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக நீக்குவதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைக்க முயற்சித்தல்.

முன்னாள் அதிகாரிகளின் அதிர்ச்சி

ஹார்முஸ் நீரிணை முடக்கம் என்பது பல தசாப்தங்களாக அமெரிக்க பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை அச்சமாக இருந்து வந்த நிலையில், அதனைத் தடுக்கத் தவறியமை குறித்து முன்னாள் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

“இதை தடுப்பதற்கே நாம் பல தசாப்தங்களாகத் திட்டமிட்டோம், ஆனால் இது இப்படி நடக்கும் என்பதை நம்ப முடியவில்லை” என முன்னாள் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )