
ஈரானுக்கு அஞ்சி பின்வாங்கியதாக அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல்!
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC), தங்கள் நாட்டு ஏவுகணைகள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதாகவும், தாக்குதலின் பின்னர் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
எனினும், அமெரிக்கா இந்தக் கூற்றை மறுத்துள்ளதுடன், விமானம் தாங்கி கப்பல் “ஆபரேஷன் எபிக் ஃப்யூரியை தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய கப்பல் ஒன்று, ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலுக்கு மிக அருகில் பயணித்ததாகவும், அமெரிக்கப் படைகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் கூற்று
ஈரானின் புனித நபி (ஸல்) அவர்களின் மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஆபிரகாம் லிங்கன் கப்பல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கடல் எல்லைகளிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில் வைத்து ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கக் கப்பலும் அதனுடன் வந்த தாக்குதல் குழுவும் “அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதாக” ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கூற்று குறித்து அரசு தொலைக்காட்சி எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
ஈரானின் இராணுவத்தின் சித்தாந்தப் பிரிவான தி கார்ட்ஸ், ஆபிரகாம் லிங்கன் தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. எனினும், ஈரானின் ஏவுகணைகள் அருகில் கூட வரவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மறுப்பு
ஈரானிய அறிக்கைகள் வெளிவந்த உடனேயே, அமெரிக்கா அவற்றை நிராகரித்தது.
அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) கப்பலின் படத்தை வெளியிட்டு, “ஆபிரகாம் லிங்கன் குழு ஆபரேஷன் எபிக் ப்யூரியை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
CBS செய்தி அறிக்கையின்படி, அமெரிக்க கடற்படைக் கப்பல், ஈரானிய கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஈரானிய கப்பல் மீது எந்த கடற்படை கப்பல் தாக்குதல் நடத்தியது என்பது அறிவிக்கப்படவில்லை.
