
‘மத்திய கிழக்கு போர்’ – கடும் நெருக்கடியில் ‘இலங்கை பொருளாதாரம்’
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போரானது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நேரடியாக சம்பந்தப்படாத நாடுகளுக்கும், குறிப்பாக இறக்குமதியை அதிகமாக நம்பும் நாடுகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் இலங்கை பொருளாதாரத்துக்கும் பல்வேறு சவால்களை உருவாக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள்
மத்திய கிழக்கு பகுதி உலக எரிபொருள் சந்தையின் முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்தால் அல்லது பெரிய இராணுவ பதற்றம் உருவானால், அதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்துக்கு பரவுவது தவிர்க்க முடியாததாக இருக்கும். பொருளாதார ரீதியாக இன்னும் மீள முயற்சித்து வரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது கூடுதல் சுமையாக மாறும் அபாயம் உள்ளது.
கொவிட் தொற்று மற்றும் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அதிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டுவரும் சந்தர்ப்பத்தில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு பெரும் பாதிப்பையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்தால் உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக உயர்வடையும். இலங்கை தனது எரிபொருளின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயர்வு நேரடியாக நாட்டின் செலவுகளை அதிகரிக்கும். அதற்போதைய சூழல் அதனைதான் உருவாக்கியுள்ளது. ஒரு வருடத்துக்குப் பின்னர் இலங்கையில் எரிபொருளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் 10 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளன. போர் நிலைமை தொடர்ந்தால் அடுத்தமாதமும் எரிபொருள் விலை உயர்வு இருக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது. அதேபொன்று எரிவாயுவின் விலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 10 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்வடைய ஆரம்பித்துள்ளன. இதனால் பொது மக்களின் வாழ்க்கைச் செலவும் உயர்வடைய ஆரம்பித்துள்ளது. அதேபோன்று எரிவாயுவின் விலை உயர்வு அனைத்து வீடுகளையும் பாதித்துள்ளதுடன், உணவங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் சமகால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதன் பிரதிபலன்களை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ள தருணத்தில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
டித்வா புயல் காரணமாக இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், உலக நாடுகளின் உதவியால் அதிலிருந்து இலங்கை மீண்டெழுந்தது. ஆனால், இந்த போர் அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளதால் இலங்கை பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்தி செலவுகளும் அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் அது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மின்சாரக் கட்டணம் உயர்வடைந்தால் அதனால் தொழிற்சாலை உற்பத்திகளின் விலைகள் கணிசமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
எரிபொருள் விலை உயர்வு மற்ற பொருட்களின் விலைகள் உயர்வடையும் போது உணவு, போக்குவரத்து, உற்பத்தி போன்ற துறைகளில் செலவுகள் அதிகரிப்பதால் பணவீக்கம் மீண்டும் உயரக்கூடும். இது ஏற்கனவே பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ள இலங்கைக்கு பெரிய சவாலாக அமையும்.
மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டால் கடல் வர்த்தக பாதைகளும் பாதிக்கப்படலாம். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்ந்தால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும். இது இலங்கைக்கு வரும் இறக்குமதி பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும்.
இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயைத் தீர்மானிக்கும் இரு பிரதான தூண்கள் சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை ஆகும். உலகளாவிய போர் சூழல் தொடர்ந்தால் மக்கள் வெளிநாட்டு பயணங்களை குறைப்பார்கள். இதனால் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும். இலங்கைக்கு பிரதான இரண்டு அந்நிய வருவாய் வழிகளாக சுற்றுலாத்துறையும், புலம்பெயர் தொழிலாளர்களும் உள்ளன. இதில் பாதிப்பு ஏற்பட்டால் அந்நிய வருவாய் குறைவடையும் என்பதுடன், முதலீடும் பாதிக்கப்படும்.
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர். அந்தப் பகுதியில் போர் சூழல் தொடர்ந்தால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் அல்லது பணம் அனுப்பும் அளவு குறையலாம். இது இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை குறைவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.
உலக பொருளாதார மந்தநிலை
பெரிய அளவிலான போர் உலக பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும். இதனால் ஏற்றுமதி சந்தைகள் குறைதல், முதலீடுகள் குறைதல், நாணய மதிப்பு அழுத்தம் போன்ற விளைவுகள் இலங்கையின் பொருளாதார நிலையை மீண்டும் சிரமப்படுத்தக்கூடும்.
ஈரான் , இஸ்ரேல், அமெரிக்கா போரின் நீட்சியானது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக இறக்குமதி பொருளாதாரத்தை அதிகமாக நம்பும் இலங்கை போன்ற நாடுகள் எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், சுற்றுலா குறைவு மற்றும் வர்த்தக சிக்கல்கள் போன்ற பல பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
இறக்குமதிப் பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் ஒரு தேசம் என்ற ரீதியில், இத்தகைய சர்வதேச அதிர்வுகளுக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். விளைவுகளை முன்கூட்டியே கணிப்பது சிறந்த பொருளாதாரத் திட்டமிடலுக்கு வழிவகுக்கும். சவால்கள் நிறைந்திருப்பினும், முறையான விழிப்புணர்வும் பொருளாதாரப் புத்திசாலித்தனமுமே இக்கட்டான சூழலில் இருந்து பாதுகாக்கும். எனவே, இத்தகைய உலக அரசியல் பதற்றங்களை முன்கூட்டியே கணித்ர் பொருளாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது இலங்கைக்கு மிகவும் அவசியமாகும்.
அதற்காக இலங்கை அரசாங்கம் பொருளாதார நிபுணர்களை கொண்ட விசேட குழுவொன்றை அமைத்துள்ளது. இந்த குழுவின் தீர்மானங்கள் வெற்றியடைந்தால் பாரிய தாக்கங்களில் இருந்து இலங்கை மக்களை அரசாங்கத்தால் பாதுகாக்க முடியும்.
(சு.நிசாந்தன்)
