
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகக் குறைந்த ரேபிஸ் உயிரிழப்புகள் பதிவாகின
இலங்கையில் கடந்த ஆண்டு (2025) ரேபிஸ் தொடர்பான உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு 14 பேர் ரேபிஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், இது நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வருடாந்திர எண்ணிக்கை என்றும் தொற்றுநோயியல் பிரிவின் சமூக நிபுணர் வைத்தியர் அதுல லியனபதிரன தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
விலங்குகள், குறிப்பாக செல்லப்பிராணிகள் கடித்தால் 12 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறினார். இதற்கிடையில், விலங்கு கீறல் காரணமாக ஒரு உயிரிழப்பும், அறியப்படாத காரணத்தால் ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் 31–40 வயதுடைய இளைஞர்கள், 41–50 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடைய நபர்கள் மற்றும் அடிப்படை நோய்கள் இல்லாத 71–80 வயதுடைய முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
பெரும்பாலான உயிரிழப்புகள் நாய் கடி காரணமாகவும், பூனை கடியால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பூனை கடித்தல் மற்றும் ரேபிஸ் தொடர்பான நிலைமையை தரவு முழுமையாக பிரதிபலிக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் போன்ற பகுதிகளில் பூனை கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த விலங்குகளின் மூளை மாதிரிகளை ஆய்வு செய்யும் போது, கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் பூனைகளிடையே ரேபிஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார். “பூனை கீறல் பூனை கடிப்பது போலவே தீவிரமானது,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காயங்கள், கடித்தல் அல்லது கீறல்கள் மூலம் விலங்குகளின் உமிழ்நீர் மூலம் இந்த நோய் பரவுகிறது என்று அவர் விளக்கியிருந்தார்.
வீட்டு செல்லப்பிராணிகள் காரணமாக நால்வரும், அயல் வீட்டாரின் செல்லப்பிராணிகள் காரணமாக மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு வைத்தியர் லியனபதிரன பொதுமக்களை வலியுறுத்தினார்.
