
ஹோர்முஸ் நீரிணை மூடல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம்
இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமையினைத் தொடர்ந்து, ஈரானிய அதிகாரிகளால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையினால் உலகளாவிய கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதன் நேரடித் தாக்கத்தினால் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறைகளும் பாரிய சவால்களை எதிர்நோக்கவுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்ததாவது, “தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் விலகிச் செல்வதால் கப்பல் கட்டணங்கள் ஏற்கனவே சிறிதளவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் கடல் மார்க்கங்கள் மாற்றப்படுவதால் கப்பல்கள் வருகை தருவதிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டார்.
Gard, Skuld, NorthStandard, London P&I Club மற்றும் American Club உள்ளிட்ட முன்னணி காப்புறுதி நிறுவனங்கள், மார்ச் 5ஆம் திகதி முதல் ‘போர் இடர் காப்புறுதி’ (War Risk Cover) வசதிகளை இரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் கடந்த மார்ச் 1ஆம் திகதி அவற்றின் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவாக கடல்சார் மற்றும் வான்வழி காப்புறுதி ஒப்பந்தங்களில் ‘போர் மற்றும் பயங்கரவாதத்தினால்’ ஏற்படும் இழப்புகள் உள்ளடக்கப்படுவதில்லை. எனவே, இவ்வாறான சூழலில் ‘போர் இடர் காப்புறுதி’ என்பது கப்பல் போக்குவரத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி
முறையான காப்புறுதி பாதுகாப்பு இன்றி வர்த்தகக் கப்பல்கள் பயணிக்க முடியாது என்பதுடன், துறைமுக அதிகார சபைகள் மற்றும் வங்கிகளும் அத்தகைய காப்புறுதியை ஒரு கட்டாய நிபந்தனையாகவே கருதுகின்றன.
கடந்த 48 மணிநேரத்தில் போர் இடர் காப்புறுதி பிரீமியக் கட்டணங்கள் கப்பல் பெறுமதியின் 0.2 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஒரு கப்பலுக்கு, ஒற்றைப் பயணத்திற்கான காப்புறுதிக் கட்டணம் 200,000 டொலரிலிருந்து சுமார் 1 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில் இலங்கையில் உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலைகளில் ஏற்றம் ஏற்படும் என கூறும் பொருளாதார நிபுணர்கள் இதற்கான மாற்று வழி குறித்து இலங்கை சில முடிவுகளை எடுப்பது கட்டாயம் எனவும் கூறுகின்றனர்.
இந்த போர் நிலைமை தொடரக் கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பலத்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு நடந்தால் அதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதுடன், போர் நிலைமை மேலும் தீவிரமடையும்.
இதனால் ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் காலம் குறித்து கணிப்பிட முடியாது. இதனால் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
எனவே, இலங்கை உடனடியாக மாற்று பொருளாதார வழிகள் குறித்து சிந்திப்பது அவசியம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
