கொழும்பில் காற்றுமாசு அதிகரிப்பு : கடும் எச்சரிக்கை

கொழும்பில் காற்றுமாசு அதிகரிப்பு : கடும் எச்சரிக்கை

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் மாசடைவு மட்டம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள நிலையில், இது பொதுமக்களின்ஆரோக்கியத்தில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் கொழும்பின் மத்திய பகுதியில் வளிமண்டலத் தரச் சுட்டெண் (AQI) 144 ஆகப் பதிவாகியுள்ளது. இது உணர்திறன் மிக்க தரப்பினருக்கு (Sensitive groups) ஆரோக்கியமற்றது எனவும், பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை அறிகுறி எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

இது குறித்து கருத்து வெளியிட்ட குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் மகேஷக விஜயவர்தன, வளிமாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் சிறுவர்கள் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

வளர்ச்சிப் பாதிப்பு: மாசடைந்த காற்றை நீண்டகாலம் சுவாசிப்பதன் மூலம் சிறுவர்களின் நுரையீரல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

சுகாதாரச் சிக்கல்கள்: ஆஸ்துமா, சுவாச நோய்கள் மற்றும் சிறுவர் இறப்பு வீதம் அதிகரிப்பதற்கும் இது காரணமாக அமையலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

வளிமாசு மட்டம் உயர்வாகக் காணப்படும் வேளைகளில், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஆஸ்துமா அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புறச் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு டாக்டர் விஜயவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

“பொதுமக்கள் தத்தமது கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள வளிமண்டலத் தர கண்காணிப்புச் செயலிகள் மூலம் அன்றாட நிலைமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். சுட்டெண் உயர்வாக இருக்கும்போது வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் மேலதிகமாகத் தெரிவித்தார்.

உலகளாவிய மற்றும் தொழில்நுட்ப ரீதியான பின்னணி:

மரணங்கள்: உலகளவில் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 600,000 சிறுவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வளிமாசு தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர்.

PM2.5 துகள்கள்: வளிமாசுபாட்டிற்கு முக்கிய காரணியாக இருப்பது PM2.5 எனப்படும் நுண்துகள்களாகும். இவை சுவாசிக்கும்போது இலகுவாக இரத்த நாளங்களுக்குள் சென்று பாரிய சுகாதாரச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.

AQI சுட்டெண்: வளிமண்டலத் தரச் சுட்டெண் 50-க்கும் குறைவாக இருந்தால் அது பாதுகாப்பானது. 100-ஐத் தாண்டினால் அது ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களின்படி, உலகின் 99 சதவீதமான மக்கள் மாசடைந்த காற்றையே சுவாசிப்பதுடன், ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் அகால மரணங்களுக்கு வளிமாசு காரணமாக அமைகின்றது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )