
அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவு
உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான உத்தரவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார்.
அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ‘இல் லாங்கு’ கடற்படை தளத்தில் இராணுவ தளபதிகள் முன்னிலையில் பேசிய அவர், “நாம் சுதந்திரமாக நிலைக்க விரும்பினால், வலிமையானவர்களாகவும், பிறர் அஞ்சும் சக்தியாகவும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
1992ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை உயர்த்தும் தீர்மானத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 290 முதல் 300 வரை அணு ஆயுதங்கள் வைத்துள்ள பிரான்ஸ், புதிய திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உள்ளது. இனி பாதுகாப்பு காரணங்களால் அணு ஆயுதங்களின் சரியான எண்ணிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாது என்றும் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற நட்பு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட போர் விமானங்களை வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன், பல்வேறு தரப்புகளில் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
