
பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர மட்டத்திலும் இன்டர்போல் மூலமாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியாவில் சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சந்தேக நபர் இன்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த பொடி லெஸ்ஸி 2024 டிசம்பர் ஒன்பதாம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, அவர் சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவை விட்டு வெளியேற முயன்றபோது, 2025 ஜனவரி மாதம் மும்பையில் இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
