
இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்
இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது.
இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது.
நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பப்படுமென கருதப்படுகிறது.
நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம், இன மத சிறுபான்மை மக்களை பாதிக்கும் விடயங்கள், இராணுவ மயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து இவ்விடையீட்டு விவாதத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
சர்வதேச சமூகத்துக்கு எடுத்தியம்பும் பொருட்டும் ஜனநாயகப் பெருமானங்கள், மனித உரிமைகள், நீண்ட கால ஸ்திரத் தன்மை உட்பட பல விடயங்கள் இவ்விவாதத்தில் இடம்பெறுமென அம்சி குணரத்னம் தெரிவித்தார்.
நோர்வே பாராளுமன்றத்தில் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவமான விடயங்கள் இடையீட்டு விவாதமாக மேற்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
