
2026 T-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
2026 T -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையே இன்று 7.00 மணிக்கு(25) நடைபெறவுள்ள முக்கியமான போட்டியை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியை பார்வையிட அதிகளவிலான இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வின்சென்ட் பெரேரா மாவத்தை (கிராண்ட்பாஸ் வீதி), பிரிட்டோ பாபாபுல்லே பாலம் சந்தி வழியாக பாபாபுல்லே வீதிக்கு செல்ல முடியும்.
பின்னர் பாபாபுல்லே பாலம் அருகில் இருந்து விளையாட்டரங்கம் நோக்கி செல்ல முடியும்.
அத்துடன் செபாஸ்டியன் கால்வாய் வீதி மெல்வத்த பாலம் அருகிலிருந்து விளையாட்டரங்கம் நோக்கி செல்ல முடியும்.
மேலும் 100 அடி வீதி, கோயில் வீதி சந்தி வழியாக விளையாட்டரங்கம் நோக்கி செல்ல முடியும்.
மாலிகாவத்தை ஒழுங்கை, விளையாட்டரங்கத்திற்கு அருகில் உள்ள பக்க வீதி வழியாகவும் செல்ல முடியும்.
சத்தர்ம மாவத்தை கோயில் வீதி (கெத்தராம வீதி) சந்தி வழியாக கோயில் வீதிக்கு செல்லலாம்.
இரசிகர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதேவேளை பெருமளவான பயணப் பைகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கத்திகள், போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் போன்றன விளையாட்டரங்கிற்குள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே சி.சி.டி.வி கண்காணிப்பு, உடல் பரிசோதனை மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், பாதுகாப்புத் தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் இரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
