நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் இரத்து செய்தது

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் இரத்து செய்தது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) ஏற்பாட்டுக் குழு, இரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் குழுவின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இன்று நடைபெறவிருந்த முக்கியமான விவாத நிகழ்வில் உரையாற்ற ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

இதேவேளை, பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்றவிருந்த நிலையில் விரிவுரை இரத்து செய்யப்பட்டது.

இதற்கமைய நாமலின் உரை இரத்து செய்யப்படுவது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன.

இந்த அழுத்தங்களின் காரணமாகவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  இந்த விடயம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்த நாமல் தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )