
கல்கிஸ்ஸையில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த தகவலுக்கமை இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 44,000 ரூபா பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சந்தேகநபர், வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் சுதாரக தேவப்பிரிய பீரிஸ் என்பவரின் மைத்துனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுதாரக தேவப்பிரிய பீரிஸின் போதைப்பொருட்களை இலங்கைக்குள் விநியோகிக்கும் பணியை குறித்த சந்தேகநபர் முன்னெடுத்து வந்துள்ளமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
