
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம்
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், இவர்களுக்கு எதிராகவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் காட்டாட்சிக்கு இடமளிக்க கூடாது. நாட்டில் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். அதனை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக வரவேற்கிறது.
அதேபோன்று அரகலய போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோதமான சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தை தீ வைக்க சில நபர்கள் வந்தனர். அதில் சிலர் தற்போது அமைச்சர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
