
இலங்கை வானொலியின் 100ஆவது ஆண்டு நிறைவு; சாதனையாளர்கள் கௌரவிப்பு
தெற்காசியாவின் முதல் வானொலி ஒலிபரப்புச் சேவையான இலங்கை வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதன் நூற்றாண்டு விழா நேற்று (12) கொழும்பு அலரி மாளிகையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைச் சபை ஆகியன இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி கிஹிதும சுனில் செனவி, தற்போது வாழ்ந்து வரும் 30 சிரேஷ்ட வானொலி ஊடகவியலாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களைப் பாராட்டி கௌரவித்தார்.
வானொலி வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய நூல்கள் இதன்போது வெளியிடப்பட்டன
கலாநிதி தம்மிக்க திஸாநாயக்க எழுதிய இந்த ஆய்வுப் படைப்பின் முதலாம் பாகம் வெளியிடப்பட்டது.
வானொலி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பும் இதன்போது வெளியீடு செய்யப்பட்டது.
“இலங்கை வானொலியின் தந்தை” எனப் போற்றப்படும் பொறியியலாளர் எட்வர்ட் ஹார்ப்பரின் (Edward Harper) பெரிதாக்கப்பட்ட நிழற்படம், இலங்கையின் அனைத்து வானொலி அலைவரிசைகளுக்கும் அடையாளப் பரிசாக வழங்கப்பட்டது.
வானொலி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக மட்டத்தில் நடத்தப்பட்ட வானொலி நிகழ்ச்சித் தயாரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாப்பலகம, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹாச்சி உள்ளிட்ட பல பழைய மற்றும் தற்போதைய வானொலி ஆளுமைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

