
23 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாப்வே அபார வெற்றி
ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ‘B’ பிரிவுக்கான லீக் போட்டியில், பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை சிம்பாப்வே அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவினால் அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு தற்போது திறந்த நிலையில் உள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இலகுவாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முடிவு குழுவின் சமநிலையை மாற்றியுள்ளது.
எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் (இலங்கை மற்றும் ஓமான்) கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். திங்கட்கிழமை இலங்கையுடனான போட்டியில் தோற்றால் அவுஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.
இலங்கை எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எவ்வித சிக்கலுமின்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், நிகர ஓட்ட விகிதம் (NRR) மற்றும் சிம்பாப்வே-அயர்லாந்து போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து தகுதி அமையலாம்.
சிம்பாப்வே எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அவர்களும் தகுதி பெற முடியும்.
இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் முடிக்கும் பட்சத்தில், நிகர ஓட்ட விகிதமே யார் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.
அவுஸ்திரேலிய அணி தனது கடைசிப் போட்டியில் ஓமான் அணியுடன் மோதுவதால், தமக்குத் தேவையான ஓட்ட விகிதத்தை அவர்கள் முன்கூட்டியே கணக்கிட்டு விளையாட வாய்ப்புள்ளது. ஒருவேளை அயர்லாந்து அணி சிம்பாப்வேயைத் தோற்கடித்தால், இந்தச் சமன்பாடுகள் மீண்டும் மாறும்.

