
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும்
“மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் தந்தது வெறும் ‘பூச்சியம்’தான். இப்போது, என்டிஏ எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற போர்வையில் அதே பூச்சியத்தைதான் மக்களும் திருப்பித் தர போகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஊழல் கறை படிந்த அத்தனை பேரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, பொய்களை பரப்பிகொண்டு, தேர்தலை சந்திக்க வருகிறார்கள்” எனவும் தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று இந்தியா டுடே-வும் சி-வோட்டர்ஸ் நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி 45 சதவீதம் ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது.
எங்களுக்கும், இரண்டாம் இடத்துக்கும் இருக்கக் கூடிய வித்தியாசம் 12 சதவீதம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மூன்று சதவீதம் வித்தியாசம் இருந்தாலே இலகுவாக ஆட்சியை கைப்பற்றிவிட முடியும். 12 சதவீதம் வித்தியாசம் என்றால், அது நிச்சயம் மிகப் பெரிய வெற்றியாகதான் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சியமைப்பதில் எந்த மாற்றமும் இருக்காது. அதற்கென்று, நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தி.மு.க. என்பது, எப்போதும், என்றென்றும், மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம். மக்களுக்காக பாடுபடக்கூடிய இயக்கம். அதனால், இன்னும் உற்சாகமாக உழைத்து, கணிப்பை உண்மையாக்குவோம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
