
சூடுபிடித்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் – புதிய மாவட்டத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி இன்று டெல்லிக்கு அவசரமாக அழைத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட இந்தத் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு பகுதியாக இச்சந்திப்பு கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர்கள் நியமனத்தில் எழுந்த பணப்பேரப் புகார்கள் மற்றும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்கள் குறித்து ராகுல் காந்தி நேரடியாக விசாரணை நடத்த உள்ளார்.
மேலும், 2026 தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வதா அல்லது ‘அதிகாரப் பகிர்வு’ கோரிக்கையை வலுவாக முன்வைப்பதா என்பது குறித்தும் தொண்டர்களின் மனநிலையை அவர் கேட்டறியவுள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல் தனித்துவத்தோடு செயல்பட வேண்டும் எனப் பிரவீண் சக்கரவர்த்தி சமீபத்தில் பேசிய கருத்துக்கள் கூட்டணிக்குள் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இன்று மதியம் டெல்லி இந்திரா பவனில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காங்கிரஸின் தற்போதைய பலம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ராகுல் காந்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
