ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டயகமவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதற்குப் பின்னால் துரத்தி வந்த தனியார் பேருந்தின் சாரதி,
இ.போ.ச பேருந்தை வழிமறித்து, சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து 05 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே லிந்துலை,
மெராயா நகருக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் இணைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹட்டன் டிப்போ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

சாரதி தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தினுள் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் கையடக்கத் தொலைபேசி ஊடாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )