
ஐசிசி டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
10-வது ஐசிசி டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது.
ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் இலங்கை, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், சிம்பாப்வே அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாள், ஸ்கொட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய அணிகள் டி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
லீக், சூப்பர் 8, அரையிறுதி, இறுதி என மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகள் இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ்.சி, பிரேமதாச மற்றும் கண்டி பல்லேகல மைதானங்களிலும், இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை, ஆகிய மைதானங்களிலும் இடம்பெறவுள்ளன.
இன்றைய போட்டி விபரம்,
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று காலை 11.00 மணிக்கு கொழும்பு எஸ்.எஸ். சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த போட்டி இன்று மாலை 03.00 மணிக்கு ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் ஈடன்காடன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பின்னர் இரவு 07.00 மணிக்கு இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி வங்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.
