78ஆவது சுதந்திர தின விழா இன்று

78ஆவது சுதந்திர தின விழா இன்று

நாட்டின் 78ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்துள்ளது. 1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற தியாகங்களைச் செய்தவர்களை கௌரவிக்கும் வகையிலும் நினைவு மற்றும் நன்றியுணர்வின் சூழலில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 அழைப்பாளர்களுடன் பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸார் அடங்கலாக 4,500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

தேசிய தின கொண்டாட்டங்களின் மீது இழக்கப்பட்டுள்ள கவனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் இலங்கை அரசியல் ரீதியாக நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்வதே இதன் நோக்கம் என பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உட்பட சிறப்பு அதிதிகளின் வருகையையடுத்து பாடசாலை மாணவ, மாணவிகளால் தேசிய கீதம் மற்றும் ஜய மங்கள கீதம் ஆகியன இசைக்கப்படும். அதனையடுத்து ஜனாதிபதியினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.

இன்று இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் நேற்று விசேட பிரித் பாராயண நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேபோன்று இன்று காலை சர்வமத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய சுதந்திர தின விழாவில் இராணுவ அணிவகுப்புக்கள், மரியாதை பீரங்கி வேட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் என அனைத்து அம்சங்களும் இடம்பெறும். அணிவகுப்பில் 234 முப்படையினதும் அதிகாரிகள் மற்றும் 3323 படை படைவீரர்களுடன். தேசிய கெடற் படையின் 12 அதிகாரிகள் மற்றும் 479 கெடற் படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் 12 இராணுவ அதிகாரிகள் மற்றும் 82 படைவீரர்களின் பங்கேற்புடன் மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. விமானப்படையின் 03 பெல் ஹெலிகொப்டர்கள் தேசியக் கொடியை பறக்கவிட்ட வண்ணம் சாகசங்களை மேற்கொள்ளவுள்ளன.

இம்முறை சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் வீண் விரயங்களை தவிர்த்து தேசிய உணர்வுடனும் பெருமையுடனும் அதனைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும.

இலங்கையிலுள்ள அனைத்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கு இதற்காக விசேட அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் 2000 விசேட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். வீண் செலவுகளை தவிர்க்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து ராஜதந்திரிகளை அழைப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )