
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்.
எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கேட்டனர். இன்று நம்மைப் பார்த்து அவ்வாறே பேசுகின்றனர்.
இந்த அத்தனை கேள்விகளையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தமிழக வெற்றிக் கழம் இன்று வளர்ந்திருக்கிறது.
தொழிலுநுட்பம் வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் திமுகவின் டெக்னிக்கை மாற்ற வேண்டும் எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று நக்கல் தொணியிலும் பேசியிருந்தார்.
இதேவேளை, தமிழக வெற்றிக் கழகம் நகர்ப்புறங்களில் தான் இருக்கிறது. கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்கள் சற்று ஆய்வு செய்து பாருங்கள்.
விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் இருக்குமிடமெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.
தமிழகத்தில் எனது அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது, அவர்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகம் என்ற தூய சக்தியால் தான் முடியும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதுதான் கள நிலவரம்.
தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தான் இப்போது இருக்கும் ஒரே தெரிவு என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.
