
நாடாளாவிய ரீதியில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு – 728 சந்தேகநபர்கள் கைது
‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் நேற்றைய தினம் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், போதைப்பொருள் தேவையைக் குறைத்தல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ‘முழு நாடும் ஒன்றாக’ என்ற தேசிய செயல்பாட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவற்றை கடத்த உடந்தையாக இருப்பவர்கள், பாதாள உலக குழுக்களின் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு தேசிய செயல்பாட்டின் கீழ் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 498 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மொத்தம் 767 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், 728 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் சிலர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
