தெஹிவளை துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் வெளியானது

தெஹிவளை துப்பாக்கி பிரயோகத்துக்கான காரணம் வெளியானது

தெஹிவளை, கடற்கரை வீதியில் (மெரின் டிரைவ்) அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளைப் பகுதியில் ஹோட்டலொன்றின் உரிமையாளர் மீது நேற்று (09) இரவு 9.10 அளவில் அடையாளந் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய “சனா மாமா” என அழைக்கப்படும் ஏ.டி. சனத் பாலசூரிய ஆரச்சி என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது ஹோட்டலினுள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தவர்களில் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது..

கொலை செய்யப்பட்ட நபர், பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் “சூவா சமந்த” (Chuwa Samantha) என்பவரின் நெருங்கிய சகா என்பது தெரியவந்துள்ளது.

மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க” மற்றும் “சூவா சமந்த” ஆகியோரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான பகையே கொலைக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, படோவிட்ட அசங்கவின் தரப்பினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், கொலை செய்யப்பட்ட “சனா மாமா” என்ற சனத் இதற்கு முன்னர் எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இருந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தெஹிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )