
பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறுபூசல்கள் – சாணக்கியன் கண்டனம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அவரின் தனிப்பட்ட விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமர் மீதான தாக்குதல் செயற்பாடுகளில் எதிர்க்கட்சி மாத்திரமன்றி அரசாங்கத்திற்குள்ளிருந்தும் சிலர் செயற்படுவது போல் சந்தேகம் எழுகிறது என்றும் அவ்வாறானவர்கள் தொடர்பில் பிரதமர் கவனமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற கடைகள், அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் வேதனைத்தையும் உறுதிப்படுத்தும்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி,
”கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெரும் விமர்சனங்கள் உள்ளன. எம்மிடையே அது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன.
குறிப்பாக வரலாறு தொடர்பான சில உள்ளடக்கங்கள் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன. அந்த வகையில் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
இந்நிலையில் பிரதமருக்கு எதிராகவும் பெண்ணென்ற வகையில் அவருக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அவரின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பெண் அரசியல்வாதியென்பதால் தனிப்பட்ட ரீதியில் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
