2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்

2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்

2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன.

Skilled Worker, Scale-up மற்றும் High Potential Individual விசாக்களுக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவர்கள், தற்போது உள்ள B1 நிலைக்கு பதிலாக, Common European Framework of Reference for Languages (CEFR) அடிப்படையில் B2 நிலை ஆங்கிலத் திறனை நிரூபிக்க வேண்டும்.

பணியிட தொடர்பாடல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த விசாக்களில் UK-யில் இருப்பவர்கள், தங்கள் விசாவை நீட்டிக்கும் போது, இந்த புதிய நிபந்தனை அவர்களுக்கு பொருந்தாது.

மேலும், 2026 பெப்ரவரி 25 முதல் Electronic Travel Authorisation (ETA) திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. “அனுமதி இல்லையெனில் பயணம் இல்லை” என்ற விதியின் கீழ், விசா தேவையில்லாத சுமார் 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன் டிஜிட்டல் முன் அனுமதி பெற வேண்டும். ETA-வின் கட்டணம் £16 ஆகும். இது இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் பலமுறை நுழைவிற்கு அனுமதிக்கும். விமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், பயணம் தொடங்குவதற்கு முன் ETA அனுமதி இருப்பதைச் சரிபார்ப்பார்கள். பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடிமக்கள் இந்த விதியிலிருந்து விலக்கு பெறுகின்றனர்.

அதே நேரத்தில், நிரந்தர குடியிருப்பு (Indefinite Leave to Remain – ILR) மற்றும் குடியேற்றம் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பெரும்பாலான குடியேற்றர்களுக்கான நிரந்தர குடியிருப்பு பெறும் காலக்கெடுவை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்தல், மேலும் உயர்ந்த ஆங்கிலத் திறன் நிபந்தனைகள் மற்றும் நீண்டகால வருமானம், பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்டால், 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது; ஏற்கெனவே நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு இது பின்நோக்கி பொருந்தாது.

2026 க்கான புதிய சம்பள வரம்பு உயர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ந்த வரம்புகள் தொடரும். குறிப்பாக, Skilled Worker விசாவிற்கான குறைந்தபட்ச சம்பள வரம்பான £41,700 விதி தொடர்ந்தும் அமலில் இருக்கும். தற்காலிகமாக வழங்கப்பட்ட shortage occupation சலுகைகள் 2026 முடிவு வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள், நிகர குடியேற்ற எண்ணிக்கையை குறைப்பது, உயர்தர திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் எல்லை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவது என்பதே நோக்கம் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், நாட்டில் நிரந்தரமாக தங்கும் குடியேற்றர்கள் நீண்டகால பங்களிப்பும் சமூக ஒருங்கிணைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனால், வேலை வழங்குநர்கள், குடியேற்றர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் UK Home Office வெளியிடும் புதிய வழிகாட்டுதல்களை கவனமாகப் பின்பற்றவும், ஆங்கிலத் தேர்வுகள், ETA விண்ணப்பங்கள் மற்றும் எதிர்கால குடியேற்றத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )