
சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக எஸ்ஐடி விசாரணை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின்போது சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி நேற்று கைது செய்யப்பட்டார்.
துவார பாலகர் சிலைகளில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்கத்தை கர்நாடகாவின் பெல்லாரியை சேர்ந்த ஜூவல்லரி உரிமையாளர் கோவர்தன் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரையும் அதிகாாிகள் திருவனந்தபுரத்துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
