
டித்வா பேரிடரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிப்பு
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சஷி தேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த முக்கிய ஆவணங்களை இழந்துவிட்டதாக திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் ஒரு நாள் துரித சேவை மூலம் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கூடுதலாக, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் “க்ளீன் சிறிலங்கா” திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயல்படுத்தப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் சான்றிதழ்களை வழங்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்கியுள்ளதாகவும், அரச சாரா நிறுவனங்களும் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டங்களில் நடமாடும் சேவை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தச் சான்றிதழ்களை வழங்கி முடிக்க இலக்கு வைத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
