
மல்வத்து, அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்கள் மற்றும் தியவடன நிலமே ஆகியோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையையும், நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும், அதற்காக தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரதிப் பதிவாளர்களான இரு தேரர்களும் தெரிவித்தனர்.
சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் ராஜகீய பன்டித வண, மஹவெல ரதனபால நாயக தேரர், சியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரை தரப்பின் பிரதிப் பதிவாளர் வரலாற்று சிறப்புமிக்க பதுளு முதியங்கன ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண, முருத்தெனியே ஸ்ரீ தம்மரதன நாயக தேரர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல ஆகியோர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியமர்த்தல் நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.
மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளில் தலதா மாளிகை வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து இதன்போது தியவடன நிலமே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
