
இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“டிட்வா சூறாவளியால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஆதரவு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.
நிலைமை தீவிரமடைந்தால் மேலும் உதவி மற்றும் நிவாரணங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை மஹாசாகர் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கிறது” என பதிவிட்டுள்ளார்.
