திருமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக்காதீர்கள்

திருமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக்காதீர்கள்

“திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திருகோணமலையில் விகாரை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புத்தர் சிலையைப் பாதுகாப்புக்காகவே அந்தச் சிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்து எடுக்கப்பட்டது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், பொலிஸாரின் தாக்குதலில் இரு பிக்குகள் காயமடைந்துள்ளனர்.

இந்த விகாரை 1952 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டில் புனித பூமியாக்கப்பட்டுள்ளது. கிழக்கில் பழமையான அறநெறி பாடசாலையும் இங்குள்ளது.

எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு பேச்சு நடத்த வேண்டும். இதனை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது. இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி தீர்வை வழங்க வேண்டும்.” – என்றார்.

Share This