தனக்கு மரண அச்சுறுத்தல் – அருண் சித்தார்த் குற்றச்சாட்டு

புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கந்தசாமி இன்பராசா என்பவர் புலிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் நீ கொல்லப்படுவாய் எனத் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெவித்தார்.
முன்னாள் புலி உறுப்பினரான கந்தசாமி இன்பராசாவைக் கைது செய்து விசாரிக்குமாறு, அவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு கோரிக்கை விடுத்தார்.
இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் நம்பும் அரசியலைச் செய்ய இருக்கும் அடிப்படை உரிமையை இன்பராசா மிக மோசமாக மீறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இன்பராசா பின்வரும் சொற்களைப் பயன்படுத்தியதாக அருண் சித்தார்த் கூறினார்:
“புலிகளை எதிர்த்து அரசியல் செய்தால் கொல்லப்படுவாய். உலகின் எந்த மூலையில் இருந்தாலும், கொழும்பில் இருந்தாலும், ஐரோப்பாவில் இருந்தாலும் நீ கொல்லப்படுவாய்.”
“யாழ்ப்பாணத்தில் நீ இருக்க கூடாது. அரசியல் செய்யக்கூடாது. தென்னிலங்கையில் போய் அரசியல் செய்.”
“நீ இனிமேல் பேசக் கூடாது. நிறுத்திக் கொள் அருண் சித்தார்த், இது தான் கடைசி எச்சரிக்கை.”
இன்பராசா தனது கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சி என்று கூறுவதைச் சுட்டிக்காட்டிய அருண் சித்தார்த், 1978 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் இலங்கையில் முதன்முதலாகத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பு, 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தப் பயங்கரவாத அமைப்பின் பெயரில் எவ்வாறு “புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சி” என்னும் பெயரில் தேர்தல் திணைக்களம் ஒரு கட்சியைப் பதிவு செய்து கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார்.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், அரசு புலிகள் முழுமையாக இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளபோதும், இன்பராசா இன்னும் “புலிகள் இருக்கின்றார்கள், தலைவர் இருக்கின்றார்” என்று தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறாயின், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்து, புலிகளும் பிரபாகரனும் எங்கே இருக்கின்றார்கள் என்பது தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டாட அனுமதியளித்துள்ளமையே இன்பராசா போன்றவர்கள் இது போன்ற தமது பழைய பயங்கரவாதச் செயல்பாடுகளை மீள ஆரம்பிக்கக் காரணம் என்றார். தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பைக் கொண்டாட அனுமதியளித்துள்ளதன் மூலம் இந்த அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
“ஒன்று, புலிகள் மீதான தடையை நீக்கி விட்டு அவர்களைக் கொண்டாட அனுமதியுங்கள். அல்லது தடை இருக்கின்றது, ஆகவே புலி உறுப்பினர்களுக்கான நினைவேந்தல்களைத் தடை செய்யுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.
