“இலங்கையின் மருந்துகள் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் ஆதரவை வழங்குங்கள்” – சஜித் இந்திய அரசிடம் வேண்டுகோள்

“இலங்கையின் மருந்துகள் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் ஆதரவை வழங்குங்கள்” – சஜித் இந்திய அரசிடம் வேண்டுகோள்

இலங்கை மருத்துவத் துறையில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறைக்கு தீர்வு காண இந்திய அரசின் ஆதரவை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜெகத் பிரகாஷ் நட்டாவை புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது இலங்கையின் தேசிய சுகாதார கட்டமைப்பினூடாக பல தசாப்த காலமாக இலவச சுகாதார வசதிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போது அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் பல மருந்துகளின் பற்றாக்குறை, அவற்றைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்துள்ளதென சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ஒரு சில மருந்துகள் தனியார் துறையினூடாக மாதிதிரமே பெற்றுக்கொள்ள முடியுமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அரச மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் அச்சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தியா வழங்கும் அவ்வொத்துழைப்பை மரியாதையுடன் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கையின் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் கடந்த காலத்தில் வழங்கிய பங்களிப்பையிட்டும் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பிக்கப்பட்ட ‘1990 – சுவ செரிய’ அம்புலன்ஸ் சேவையை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அச்சேவையை அறிமுகம் செய்ததினூடாக நாடு முழுவதும் அவசர மருத்துவ பதிலளிப்பு கட்டமைப்பு வலுவடைந்ததாகவும்,அது “உயிர் காக்கும் கூட்டாண்மை” என விவரிக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, ஔடத ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது மற்றும் அனைவருக்கும் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் விரிவாக கலந்துரையாடினர்.

Share This