கிழக்கு மாகாணத்தின் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் நடாத்திய சர்வதேச முதியோர் தின விழாவில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிறந்த முதியோர் சங்கமாக காரைதீவு கண்ணகி முதியோர் சங்கம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் கிருஷ்ணபிள்ளை இளங்குமுதன் தலைமையில் முதியோர் தின கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் (09) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்ட சிறந்த முதியோர் சங்கங்கள் முதியோர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர, காரைதீவு கண்ணகி முதியோர் சங்கத் தலைவர் த.சிவானந்தராஜா பொருளாளர் த. வசந்தாதமலர் ஆகியோரிடம் அதற்கான விருதை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவை அமைச்சின் செயலாளர் ஜி.திசாநாயக்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராஜா மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
சிறந்த முதியோர் சங்கமாக தெரிவான காரைதீவு கண்ணகி முதியோர் சங்கத் தலைவராக த.சிவானந்தராஜா( முன்னாள் இபோச உத்தியோகத்தர் ஊடகவியலாளர்) ,செயலாளராக இ.நடேசபிள்ளை( ஆடை வடிவமைப்பாளர்), பொருளாளராக த. வசந்தமலர் மற்றும் ஆறு பேர் கொண்ட நிர்வாக சபையினர் சிறப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.