ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையை (SVAT) இடைநிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ ஆகியோருக்கிடையில் இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இங்கு பிரத்தியேக சிநேகபூர்வ கலந்துரையாடலுக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கார்மென் மொரேனோ மற்றும் கலாநிதி ஹெஸ்ஸுடன் இணைந்து, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மை துறையை சேர்ந்த வணிக முயற்சித் தலைவர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.
இதன் ஊடாக, உள்நாட்டு தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களை ஐரோப்பிய ஒன்றிய தூதுரிடம் நேரடியாக முன்வைக்க இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்ததாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொழில் வியாபார முயற்சியாண்மை நடவடிக்கைகளுக்கு சமமான சூழலை உருவாக்குதல், கொள்கை ரீதியிலான இணக்கத்தை உறுதி செய்தல், இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கான வழிகளை ஆராய்வது என்பன தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த கலந்துரையாடலில் முதன்மையாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.