LGBTIQ சமூகத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது – புத்திக ஹேவாவசம்

LGBTIQ சமூகத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது – புத்திக ஹேவாவசம்

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக LGBTIQ சமூகத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் தொடர்பில் விளக்கமளித்த அவர், இலக்கு வைக்கப்பட்டுள்ள 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்காக, சமூக ஒழுக்கத்திற்கு முரணான எதையும் செய்யப்போவதில்லை என்று உறுதியாகக் கூறினார்.

“இது எந்த வகையிலும் பிரச்சாரமோ அல்லது ஊக்குவிப்புத் திட்டமோ அல்ல. இது சமத்துவத்தைப் பாதுகாப்பதற்கான எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவது மட்டுமே,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

EQUAL GROUND என்ற அமைப்புடன் இணைந்து LGBTIQ சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றிற்கு அனுமதி அளிக்கும் வகையிலான கடிதம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்தே பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

“சமூகத்தில் எமது நிறுவனம் சமர்ப்பித்த கடிதம் குறித்து ஒரு தவறான கருத்து பரவி வருகிறது. இது உண்மையில், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றுமொரு நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதமாகும் . இதன் உள்ளடக்கத்தையும் கருத்தையும் பார்த்தால், LGBTIQ சமூகம் சுற்றுலாத்துறையுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பது பற்றித்தான் பேசுகிறது. ஆனால், நாம் LGBTIQ சுற்றுலா ஊக்குவிப்பை செய்வதாக ஒரு தவறான விளக்கம் செல்கிறது. இது மொழி மற்றும் புரிந்துணர்வில் ஏற்பட்ட குறைபாடு என்றே நான் நினைக்கிறேன்,” என புத்திக்க ஹேவாவசம் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கம் மற்றும் நிறுவனமாக, சகல இனங்கள் மற்றும் மதங்களின் சமத்துவத்தை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளின் சமத்துவத்தை உறுதி செய்வதே தமது பிரதான பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

Share This