மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (06) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி ஜீவநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 10.00 மணிக்கு மது போதையில் தண்டவாளத்தில் தலையினை வைத்து நித்திரையில் இருந்த போது கடுகதி ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் .
இதனையடுத்து சடலத்தை மீட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் சாரதி பிரயாணத்தை மோற்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.