விபத்துக்குள்ளான பஸ் – பதிவு ரத்து செய்யப்பட்டது

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பஸ், 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கு எவ்வித சட்டங்களும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
குறித்த வீதியில் விபத்துகளைக் குறைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் குழு ஒன்று விபத்தில் சிக்கிய பஸ்ஸை ஆய்வு செய்ய அந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ளது.
மேலும், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் (NTMI) மற்றும் போக்குவரத்து அமைச்சின் வீதி பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்த அதிகாரிகள் குழு, இன்று (06) எல்ல பகுதிக்குச் சென்று விபத்தில் சிக்கிய பஸ்ஸை ஆய்வு செய்யவுள்ளதாக வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியில், தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்காக சென்ற குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, வீதியின் 24ஆவது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.